சிவராத்திரி




கற்பாந்த காலம் என்பது உலக முடிவு காலம் என்பதை குறிக்கும். இதனை ஊழிக்காலம், உகாந்த காலம் என்றும் சொல்வார்கள். உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனையும், இறை வழிபாட்டையும் மறந்து, துறந்து, தீயச்செயல்களைச் செய்யத் தொடங்கும்போது, பஞ்சமா பாதகங்களும் தயவு தாட்சண்யம் இன்றி நடைபெறும். இறைவனை மறந்து எதையும் செய்யலாம் என்று மக்கள் நினைக்கும் நிலை உண்டாகும் காலமே உலகத்தின் முடிவு காலமாகும்.
மகா சிவராத்திரி கதை: ஒரு முறை இதுபோன்ற ஊழிக்காலத்தின்போது, பிரம்மதேவன் இறந்து போனார். இதையடுத்து ஏற்பட்ட பிரளயத்தில் (வெள்ளப்பெருக்கு) உலக உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அப்போது ஈசனின் இடப்பாகம் அமர்ந்த அன்னையானவள், சிவபெருமானை வழிபட்டு, அவரின் அருளைப் பெற்றாள்.
அழிந்துபோன உயிர்கள் அனைத்தும் முக்தியை அடையவேண்டும் என்று அன்னை, சிவனை வேண்டி வரம்பெற்றாள். தவம் இருந்து வரம் பெற்ற இரவே மகாசிவராத்திரி என்று கூறப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று இரவு, சிவபெருமானை நான்கு யாம காலத்திலும் பூஜித்து வழிபட்டால் அவர்கள் முக்தியை அடைவார்கள்.
இதே போல் மற்றொரு கதையும் மகாசிவராத்திரி தோன்றியதற்கான காரணமாக கூறப்படுகிறது. படைப்புத் தொழிலை செய்து வந்த பிரம்மாவுக்கு, உலகை சிருஷ்டிக்கும் தன்னை விட உலகில் உயர்ந்தவர் எவரும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது. அந்த செருக்குடன், வைகுண்டம் சென்ற அவர் மகாவிஷ்ணுவிடம், உலக உயிர்களை தோற்றுவிக்கும் தானே உலகில் சிறந்தவன் என்று கூறினார்.
இதனால் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மதேவருக் கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டு போர் மூண்டது. நூறு வருட காலம் இந்த போர் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஈசன் நெருப்பு பிழம்பாக தோன்றி, எனது அடி, முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்களே உலகில் உயர்ந்தவர் என்று கூறினார். அவர் நெருப்பு பிழம்பாக தோன்றி,’ திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் காட்சி கொடுத்த இரவே மகாசிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.
விரத முறை: மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள் நிச்சயமாக முக்தியை அடைவார்கள். காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, சிவபெருமானை பூஜிக்க வேண்டும். பின்னர் சிவன் கோவில்களுக்குச் சென்று, அங்கு இறைவனுக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
அன்று இரவு சிவன் கோவில்களில் நடைபெறும் நான்கு கால ஜாம பூஜைகளில் கலந்துகொண்டு, தூக்கமின்றி சிவ மந்திரத்தை பாராயணம் செய்து வர வேண்டும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரையான 12 மணி நேரக் காலத்தை குறிக்கும். ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும். நான்கு சாம பூஜை என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் போன்றவற்றை இறைவனின் காலடியில் சமர்ப்பணம் செய்வதை குறிக்கின்றன.
மறுநாள் காலையில் புனித நீராடி, இயன்றவரை அன்னதானம் செய்ய வேண்டும். அன்றைய தினம் பகல் முழுவதும் சிவபுராணத்தை படித்தோ, அல்லது கேட்டோ இறைவனையே எண்ணி இருக்க வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்து பால், பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

விரத பலன்: மகத்துவம் நிறைந்த இந்த மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியை எய்துவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வரவேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுடன், அவர்களின்
சந்ததியில், 21 தலைமுறையினருக்கு கூட பலன் கிட்டும்.





 சிவராத்திரி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள் புராணங்களில் பல உள்ளன. அதே போல் சிவராத்திரியைப் போற்றும் பல திருத்தலங்களும் உள்ளன.
பொதுவாக எல்லா சிவாலயங் களிலும் மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை சிறப்பிக்கப் படுகிறது.
கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும்; திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன.
மாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்லும்.

சிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமாகக்
கருதப்படுகிறது. இதை “லோக சிவராத்திரி’ என்று சொல்வார்கள். இவ்வாண்டு திங்கட்கிழமையில் சிவராத்திரி அமைவது குறிப்பிடத் தக்கது. அன்று விரதம் கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.
சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். இரவெல்லாம் சிவபெருமானைப் பூஜித்தாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம். அந்த நாள் சிவராத்திரி.
தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாளும் சிவராத்திரியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் பெற சிவபெருமானை தியானித் தான். அப்போது ஆதி சேஷன்முன் தோன்றிய ஈசன், சோழ நாட் டில் காவிரிக்கரை யில் உள்ள தலங்களுக்குச் சென்று மகா சிவராத்திரியில் வழிபடுமாறு கூறினார். அதன் படி கும்ப கோணம் அருகிலுள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலத்தில் வழிபட்டபின், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரில் உள்ள நாகேஸ்வரரை நான்காம் காலத்திலும் வழிபட்டு ஆதிசேஷன் பேறுகள் பெற்றான் என்று புராணம் கூறும்.

இதுபோல சிவராத்திரியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் பல உள்ளன. அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்களுடன் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களும்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி போற்றப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது “கோவிந்தா கோவிந்தா’ என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் என்பர்.
சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் சிவ பெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஞான நூல்கள் சொல்கின்றன. இயலாத வர்கள் நான்காம் காலத்திலாவது பஞ்சமுக தீப அர்ச்சனை செய்து, ஐந்து வகையான அன்னங் களை இறைவனுக்கு நிவேதிக்க வேண்டும்.

அன்று தானதர்மங்கள் செய்வது சிறப்பிக்கப் படுகிறது.
சிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்!